புனே நிலச்சரிவு... மோடி உத்தரவின் பேரில் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்!
டெல்லி: புனேவில் நிலச்சரிவு காரணமாக 150க்கும் அதிகமானோர் புதைந்து போயுள்ளதாக அஞ்சப்படும் கிராமத்தை நேரில் ஆய்வு செய்ய உள்துறைச் செயலாளர் ராஜ்நாத் சிங்கை அறிவுறுத்தியுள்ளார் பிரதமர் மோடி..
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே பாம்பே எனும் கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 45 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 23 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழு துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை நேரில் கண்டு துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய பிரதமர் உத்தரவிட்டிருப்பதாகவும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 80 வீரர்கள் சென்றிருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.