புனே நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 31 ஆனது... தொடர் மழையால் மீட்புப் பணியில் தொய்வு
டெல்லி: புனே அருகே பாம்பே கிராமத்தில் நிலச்சரிவொல் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 31ஐத் தொட்டுள்ளது. இன்னும் 150க்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்து போயிருக்கலாம் என அஞ்சப் படுகிறது. எனவே, பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே பாம்பே எனும் கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 45 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 80 வீரர்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனபோதும், அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் புதையுண்டவர்களை மீட்கும் பணி தாமதமாகி வருகிறது.
நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை நேரில் கண்டு துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவின் போது மக்கள் உறக்கத்தில் இருந்ததால் தப்பிக்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனக் கூறப்படுகிறது.