புனே நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு! மேலும் 130 பேரின் கதி என்ன?
மும்பை: புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே மேலும் 130 பேர் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஆம்பே அருகே மாலின் என்ற மலையடிவார கிராமத்தில் கன மழை காரணமாக கடந்த புதன்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தை சேர்ந்த 44 வீடுகளும், ஒரு கோவிலும் முற்றிலுமாக மண்ணில் புதைந்தன.
ஒட்டுமொத்தமாக அந்த கிராமமே இயற்கையின் சீற்றத்தில் சிக்கி புதையுண்டது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர்.
அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழையை பொருட்படுத்தாமல் மீட்பு பணி இரவு- பகலாக நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 378 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தீயணைப்பு படை வீரர்கள், சுற்றுவட்டார கிராம மக்களும் மீட்பு பணியில் தீவிரம் காட்டி உள்ளனர்.
மொத்தம் இதுவரை 73 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 மாத கைக்குழந்தை உட்பட 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நிலச்சரிவு நடந்த இடத்தில் யாராவது மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறார்களா? என்பதை அறிய பேரிடர் மீட்பு படையினர் 2 நவீன கருவிகளை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 6 மோப்ப நாய்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
ஆனால், உயிருடன் மீட்கப்பட்ட 9 பேரை தவிர வேறுயாரும் மண்ணுக்குள் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் உயிருடன் சமாதி ஆகி இருக்கலாம் என்று தெரியவந்து இருப்பதாக மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
இதனால் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் மற்ற அனைவரும் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் 130 பேர் வரை மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் மீட்பு பணியின் போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது.