ஓட்டல் முதல் லேப்டாப் வரை எல்லாத்துக்குமே “ஆபர்”– பஞ்சாப்பின் தேர்தல் அதிரடி
அமிர்தசரஸ்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு பஞ்சாப் இளைஞர்களுக்கு ஹோட்டல் முதல் லேப்டாப் வரை எல்லாவற்றிலும் சிறப்பு தள்ளுபடி அளிக்கப் பட்டு வருகின்றது.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் 1.93 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள். 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 லட்சம் பேர்.
பஞ்சாப்பில் இந்த முறை இளைஞர்களின் ஓட்டு அதிகமாக இருப்பதால், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஹோட்டல் முதல் மால் வரை தள்ளுபடி:
ஹோட்டல், ஷாப்பிங் மால், ரெஸ்டாரண்ட், சினிமா தியேட்டர் ஆகிய இடங்களில் "முதல்முறை" வாக்காளர்களுக்கு சிறப்பு தேர்தல் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 சதவீதம் முதல் 20 வரை:
தேர்தலில் முதல் முறையாக வாக்களித்தவர்களுக்கு, ஓட்டு தினத்தன்று ஹோட்டலில் சாப்பிட 10 சதவீத தள்ளுபடியும், ஹோட்டல் அறைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும் என அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
போன் வாங்கினாலும் தள்ளுபடி:
மேலும், மொபைல்போன், லேப்டாப் வாங்கும் முதல் வாக்காளர்களுக்கு மே 1 முதல் 31 ஆம் தேதி வரை சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக.. சந்தோஷத்தில்:
இதனால், பஞ்சாப்பில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.