ரோஜாவின் 'ராஜா' செல்வமணி மனைவிக்கு ஆதரவாய் பிரச்சாரம்
நகரி: ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றார் அவரது கணவரும், இயக்குனருமான செல்வமணி.ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டும் நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக ரோஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நகரி தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் பல சேவைகளை மக்களுக்கு செய்து வருகிறார் நடிகை ரோஜா.
படிக்க வாய்ப்பும்,வசதியும் இல்லாத குழந்தைகளின் கல்விச்செலவிற்கு மாதம் 300 ரூபாய் வழங்கி வருகின்றார்.
இத்தொகுதியில் ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேச முன்னாள் அமைச்சரும்,இத்தொகுதியில் 6 முறை வெற்றி வாகை சூடியவரும்,அரசியல் வல்லுனருமான முத்து கிருஷ்ண நாயுடு போட்டி இடுகின்றார்.
காங்கிரஸின் சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கா ரெட்டியின் மகள் சத்திய சொரூப இந்திரா போட்டியிட இருந்தாலும்,போட்டியென்னவோ முத்துவுக்கும்,ரோஜாவுக்கும் இடையில்தான் கடுமையாக நிலவுகின்றது.
நடிகை என்ற பந்தா இல்லாமல் பழகுவதால் மக்களுக்கு ரோஜாவின் மேல் நல்ல மரியாதை உள்ளது.மேலும்,செல்வமணியின் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்த மக்கள் இத்தொகுதியில் அதிகம்.
இதனால்,செல்வமணி இத்தொகுதியில் ரோஜாவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றார்.இங்கு பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதால் ரோஜாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.நகரி தொகுதியில் தெலுங்கு மக்களும்,தமிழ் மக்களும் சம அளவில் காணப்படுகின்றனர்.