மீண்டும் ‘முத்த மழையில்’ நனைந்த ராகுல்... இம்முறை ஆண் தொண்டர்
முர்ஷிதாபாத்: தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ராகுலின் பேச்சைக் கேட்பதற்காக அதிகளவு தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர்.
பிரச்சாரத்தின் இடையில் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதீர் சவுதாரியுடன் அங்கிருந்த கடை ஒன்றில் இனிப்பு சாப்பிட சென்ற ராகுலை தொண்டர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, ராகுலை மிக அருகில் பார்த்த தீவிர காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்தார். மகிழ்ச்சியில் ராகுல் அருகில் சென்ற அவர், ராகுலை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார்.
இதனால் ராகுல்காந்தி தர்மசங்கடத்திற்குள்ளானார். பின்னர் மீண்டும் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் ராகுல்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று அசாமில் பெண் தொண்டர் ஒருவர் ராகுலுக்கு முத்தமிட்டு பின்னர் பிரச்சினையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அப்பெண்ணை அவரது கணவரே கொலை செய்து விட்டதாக ஊடகச் செய்திகள் வெளியானது நினைவுகூரத்தக்கது.