என்ன கிண்டலடித்தாலும் "மிட்டாய்... மீட்டரை" ராகுலும் விடுவதாக இல்லை!!
குவஹாத்தி: "நீங்கள் அதானியாக இருந்தால் ஒரு மிட்டாய்க்கு ஒரு மீட்டர் நிலத்தை குஜராத் அரசு உங்களுக்கு கொடுத்துவிடும்" என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
"ஒரு மிட்டாய்க்கு ஒரு மீட்டர்" என்ற விஷயத்தை பல இடங்களில் ராகுல் காந்தி பேசிவிட்டார். இதை பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் ஆகியோர் கிண்டலடித்துவிட்டனர். ஆனாலும் ராகுல் விட்டுவிடுவதாக இல்லை.
அசாம் மாநிலம், நகவுன் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய ராகுல் காந்தி பேசியதாவது:
இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
குஜராத் முன்மாதிரி, குஜராத் முன்மாதிரி என்று மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அவர் என்ன செய்திருக்கிறார்?
விவசாய நிலங்கள்
விவசாயிகளை வஞ்சித்து, சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களை ஒரு மீட்டர் ஒரு ரூபாய் விலைக்கு தொழிலதிபர் அதானிக்கு வாரி வழங்கியுள்ளார். பிறகு, அதே நிலங்களை அதானி ஒரு மீட்டர் 800 ரூபாய் விலைக்கு விற்றுள்ளார்.
அதானி நிறுவனங்கள்
இப்படி, அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி, விவசாயிகளுக்கு அதிக விலைக்கு விற்றதால் 3 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனத்துடன் இருந்த அதானியின் நிறுவனங்கள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாறியது.
ஒரு மிட்டாய்க்கு ஒரு மீட்டர் நிலம்
இங்கு ஒரு மிட்டாய் (டாஃபி) ஒரு ரூபாய்க்கு விற்கிறது. நீங்கள் ஒரு மிட்டாய் தந்தால், ஒரு மீட்டர் நிலத்தை குஜராத் அரசு உங்களுக்கு கொடுத்துவிடும்... நீங்கள் அதானியாக இருந்தால்...
ஜவுளி ஆலைகள்
மோடி குஜராத்தின் முதல்வர் ஆவதற்கு முன்னதாகவே, இங்குள்ள மக்கள் கஷ்டப்பட்டு ஜவுளி ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளை ஏற்படுத்தினர். இப்போது, இந்த வளர்ச்சி எல்லாம் என்னால் தான் ஏற்பட்டது என்று மோடி பேசி வருகிறார்.
தனி மனிதனால் மாற்றமா?
தன்னால் மட்டும்தான் இந்தியாவுக்கு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று மோடி பேசி வருகிறார். தனி மனிதனால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. கோடிக்கணக்கான மக்களின் கூட்டுமுயற்சியால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும்.
இவ்வாறு ராகுல் மீண்டும் பேசினார்.