பலூன், மிட்டாய்க்கு ஆசைப்படும் ராகுல்காந்தி: சத்தீஸ்கர் முதல்வரும் கிண்டல்
ராய்ப்பூர்: அரசியல் முதிர்ச்சியில்லாத ராகுல்காந்தியின் கனவெல்லாம் பலூன் மீதும் மிட்டாய் மீதும்தான் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் கிண்டலடித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம் பாஜகவின் பொய் பிரச்சாரம் பலூன் போல வெடித்து சிதறிவிடும் என்றும், குஜராத்தில் நரேந்திரமோடி அரசு தொழிலதிபர் ஒருபவருக்கு மிட்டாய் விலையில் நிலங்களை தாரை வார்த்துள்ளது என்றும் பேசிவருகிறார்.
குழந்தைகளுக்கு பிடித்த பலூன், மிட்டாய் போன்ற ஐட்டங்கள் குறித்து, ராகுல்பேசுவதை சமூக வலைத்தளங்களில் பலரும் கேலி செய்துவருகிறார்கள். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் ராகுலை பலூன், மிட்டாய்க்கு ஆசைப்படுகிற குழந்தை என கிண்டலடித்து வருகிறார்.
தற்போது சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங்கும் தம் பங்குக்கு ராகுல் காந்தியை கிண்டல் செய்து பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் ராகுல்காந்தி எங்கெல்லாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டாரோ அங்கெல்லாம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. அரசியலில் ராகுலுக்கு முதிர்ச்சியில்லை என்பதைத்தான் இந்த முடிவுகள் காண்பிக்கின்றன.
அவரது ஒரே தகுதி நேரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமே. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் கூட நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் இரட்டை இலக்க இடங்களை கூட வெற்றி பெற முடியாது.
நரேந்திர மோடி கூறியதைப்போல ராகுல் காந்தியின் கொள்கை, கனவு எல்லாமே பலூன் மற்றும் மிட்டாய் மீது மட்டுமே உள்ளது. அவருக்கு நாட்டின் மீதான தொலைநோக்கு பார்வையில்லை.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் திறமையான நபர்தான். ஆனால் அவர் தம்மை கட்சிக்காக மாற்றியமைத்துக் கொண்டதன் விளைவு இன்று அவரது பேச்சை காங்கிரஸ்காரர்களே பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
இவ்வாறு ராமன்சிங் தெரிவித்தார்.