2ஜி விசாரணை அறிக்கையை கிழித்துப் போட வேண்டும் ராகுல் - பாஜக
இதுகுறித்து பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், 2ஜி விவகாரம் தொடர்பான பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாராணை காங்கிரஸ் தலைமையிலான அரசு நடத்திய மிகப் பெரிய நாடகம்.
இது முற்றிலும் உண்மைகளற்ற, அரைகுறையான உண்மைகளுடன் கூடிய, முரண்பாடான அறிக்கையாக உள்ளது. இதை அடுத்து நாடாளுமன்ற் கூட்டத்தின்போது ராகுல் காந்தி கிழித்து குப்பையில் போடுவார் என்று நம்புகிறோம். அவர் அதைச் செய்ய வேண்டும். அவர் இதைச் செய்தால் நல்லது.
இந்த அறிக்கையை நிராகரிக்கிறது பாஜ. இதுதொடர்பாக 36 பக்கங்களைக் கொண்ட கடிதக் குறிப்பை கூட்டுக் குழுத் தலைவரிடம் கொடுத்துள்ளோம்.
பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் சம்மன் அனுப்ப முடியாது என்று கூட்டுக் குழு மறுத்ததே அதன் பாரபட்சமான போக்கைக் காட்டி விட்டது.
எங்களது ஆட்சேபனைக் கடிதத்தை கூட்டுக் குழு தலைவர் திருத்தவோ அல்லது வரிகளை நீக்கவோ முயற்சிக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம். இந்தக் கவலையை லோக்சபா சபாநாயகரிடமும் நாங்கள் தெரிவித்துள்ளோம் என்றார் அவர்.