நிச்சயம் நடந்த அன்றே ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் மீது பலாத்கார வழக்கு
பெங்களூர்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்தா கவுடாவின் மகன் மீது நடிகை ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக். அவருக்கு கொடகு பகுதியில் உள்ள குஷால் நகரில் புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நான் தான் கார்த்திக்கின் மனைவி என்று மாடலும், நடிகையுமான மைத்ரியா கவுடா என்பவர் தெரிவித்தார்.
கார்த்திக் தன்னை கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி ரகசியமாக மங்களூரில் வைத்து கார் டிரைவர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காத்திரு
தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கும் வரை இந்த திருமணம் குறித்து யாரிடமும் கூறாமல் காத்திருக்குமாறு கார்த்திக் கூறியதாக மைத்ரியா கவுடா தெரிவித்தார்.
புகார்
கார்த்திக்கின் நிச்சயதார்த்தம் நடந்த இரவு மைத்ரியா பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கார்த்திக்
என் அப்பாவின் பெயரைக் கெடுக்கவே அவர் இப்படி புகார் கொடுத்துள்ளார் என்று சதானந்த கவுடாவின் மகன் தெரிவித்துள்ளார்.
சதானந்த கவுடா
அந்த பெண்ணின் புகாரை பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். என் வாழ்க்கை ஒரு திறந்து புத்தகம் என்பது அனைவருக்கும் தெரியும். என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் முடிந்த கையோடு ஒரு பெண் புகார் தெரிவித்தால் அது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.