ராபர்ட் வதேராவுக்கான நில ஒதுக்கீட்டை ரத்து செய்தது ராஜஸ்தான் அரசு!!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கான நில ஒதுக்கீடை ரத்து செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2010 ஆம் ஆண்டு அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 374.44 ஹெக்டேர் நிலம் வாங்கினார்.
இந்த நிலத்தை அவர் அங்குள்ள பிகானிர் மாவட்டத்தில், தனது ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்துக்காக வாங்கினார். ஆனால் இதில் மோசடி நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே புகார்கள் கிளம்பின.
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தபோது, தற்போதைய முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மாநிலத்தில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், ராபர்ட் வதேரா நிலம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்த நிலையில் ராபர்ட் வதேராவின் 18 நில ஒதுக்கீடுகள் தொடர்பாக கொலாவட் உட்கோட்ட நடுவர் மன்றத்தில் உள்ளூர் தாசில்தாரால் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இப்போது விசாரணைக்கு பின்னர் அந்த 18 நில பரிவர்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் 374.44 ஹெக்டேர் நிலம் சட்டவிரோதமாக கையகப்படுத்தப் பட்டிருந்ததை ராஜஸ்தான் அரசு ரத்து செய்திருப்பது, சட்டத்துக்கு கிடைத்த வெற்றி என பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சி, ‘ராஜஸ்தான் மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை, ராபர்ட் வதேராவுக்கு எதிரானது அல்ல. அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படவில்லை என கருத்து கூறி உள்ளது.