ரஜினி- மோடி சந்திப்பால் பாஜக செல்வாக்கு அதிகரிப்பு: நடிகை ஹேமாமாலினி ஆரூடம்
மதுரா: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடையேயான சந்திப்பால் நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று நடிகையும் பாஜகவின் மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமாமாலினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் திருச்சியை அடுத்த ஜீயர்புரத்தில் பிறந்தவர் நடிகை ஹேமாமாலினி. பாலிவுட் உலகில் கனவுக்கன்னியாக வலம் வந்த இவர் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தார். தமிழில் ஹேராம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார்.
தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அண்மையில் ரஜினியை மோடி சந்தித்தது தொடர்பாக ஹேமாமாலினி தெரிவித்துள்ள கருத்து: இந்த சந்திப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
ரஜினி என்றைக்குமே ஒரு கிங் மேக்கராக இருக்கவே விரும்புகிறார். அவர் அரசியலுக்கு வந்தால் எங்களை போன்ற பலரை வீட்டுக்கு அனுப்பிவிடும் செல்வாக்கு அவருக்கு இருக்கின்றது. ஆனால் அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுப்பது எது என்று தெரியவில்லை.
இவ்வாறு ஹேமாமாலினி கூறினார்.