அதாரு ராஜ்நாத் சிங்?, எனக்கு மோடியை தான் தெரியும்: ராஜ் தாக்கரே
மும்பை: அது யார் ராஜ்நாத் சிங்? எனக்கு மோடி தான் தெரியும் என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று பாஜக மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவை கெஞ்சியும் அக்கட்சியில் போட்டியிடுகிறது. இந்நிலையில் நவநிர்மன் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பீட் தொகுதியில் போட்டியிடும் மூத்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜ் கூறுகையில்,
என் கட்சி மோடிக்கு ஆதரவு அளிக்கிறது. எனக்கு சிங் யாரையும் தெரியாது. எனக்கு மோடி மட்டுமே தெரியும். மேலும் மோடி பிரதமர் ஆவார் என்று எனக்கு தெரியும். முண்டே 6 முறை எனக்கு போன் செய்தார். அதனால் அவரையும் நான் ஆதரிக்கிறேன் என்றார்.
பாஜக கேட்காமலேயே ராஜ் தாக்கரே மோடிக்கு ஆதரவு அளித்துள்ளது குறித்து ராஜ்நாத் சிங் கடந்த வாரம் விமர்சித்தார். ராஜ் ஒன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் அல்லது அவரது கட்சியை பாஜகவுடன் சேர்த்துவிட வேண்டும் என்று தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.