அமளியோடு தொடங்கிய ராஜ்யசபா: ட்ராய் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம்
டெல்லி: பயங்கரவாதி ஹபீஸ் சையத்தை, பிரபல யோகா குழு பாபா ராம்தேவின் உதவியாளர் சந்தித்து பேசிய விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா இன்று அடுத்தடுத்து இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா நியமனத்தில் உள்ள தடைகளை நீக்க வழிவகுக்கும் டிராய் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
மாநிலங்களவை இன்று காலை தொடங்கியதும், 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமா உத் தவா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சையத்தை, பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு நெருக்கமான பத்திரிகையாளர் வேத் பிரதாப் வைதிக் சந்தித்தது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
அரசு பொறுப்பல்ல
இந்த சந்திப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாஜக ஏற்கனவே அளித்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ராஜ்யசபாவில் இன்று விளக்கம் அளித்து பேசுகையில், "எந்த ஒரு பத்திரிகையாளரும் தங்களது சொந்த திறமையில் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலுக்கும் அரசு எவ்விதத்திலும் பொறுப்பாகாது" என்றார்.
அமளி ஒத்திவைப்பு
ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ட்ராய் திருத்த மசோதா நிறைவேற்றம்
பின்னர் அவை கூடியதும் ட்ராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா ராஜ்யசபாவில் இன்று விவாதத்திற்குப் பின்னர் நிறைவேறியது.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிர்பெந்ரா மிஸ்ரா முன்னதாக, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பதவி வகித்தவர். ட்ராய் விதிமுறைப்படி அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரும் உறுப்பினர்களும் வேறு அரசு பதவிகளை வகிக்கக் முடியாது.
இதனிடையே, இந்த விதியில் திருத்தம் செய்யும் மசோதா கடந்த 11ஆம் தேதி ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக ஆதரவு
அதேவேளையில், பாஜக அரசு அவசரகதியில் கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. அது குறித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, அதிமுக இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்கான நிர்பந்தம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமரின் முடிவு
அவருக்கு பதிலளித்த அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, பிரதமரின் முடிவை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று பதிலளித்தார். அதன்பின், குரல் வாக்கெடுப்பு மூலம் டிராய் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
தடை நீக்கம்
இதையடுத்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதவி வகிப்பவர் வேறு அரசு பதவிகளை வகிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நிர்பெந்ரா மிஸ்ரா ட்ராய் தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.