பலாத்காரம் செய்தால் ஷாக் அடிக்கும் பிரா- கல்லூரி மாணவன் கண்டுபிடிப்பு
டெல்லி: பலாத்காரம் செய்ய கை வைத்தால் ஷாக் அடிக்கும் பிரா, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முன்பு காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாம்.
இது போன்ற ஒரு பிராவை, சண்டீகரை சேர்ந்த மனிஷா மோகன் (24), என்ற எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக, ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவன் உருவாக்கியுள்ளார். ஜூலை 1ம்தேதி முதல் 20ம்தேதிவரை டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது, பார்வைக்கு வைக்கப்பட உள்ள, புதிய கண்டுபிடிப்புகள் பட்டியலை பல மாணவர்களும், கண்டுபிடிப்பாளர்களும் குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதில் தேர்வானவர்கள் மட்டும் அந்த 20 நாள், நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைக்கலாம்.
இதில் மனிஷா மோகன் தயாரித்துள்ள பிராவுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. இந்த பிராவை தொடும்போது, ஷாக் அடித்து கைகள் கருகும் அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்துமாம். அத்தோடு, பிராவை வலுக்கட்டாயமாக அவிழ்க்க முயலும்போது, உடனடியாக அதை அணிந்திருக்கும் பெண்ணின் பெற்றோர் மற்றும் காவல்துறைக்கு, சம்பவம் நடைபெறும் இடம் குறித்த தகவல் செல்போன் மெசேஜாக சென்றடையும். இதற்காக ஜிபிஎஸ் கருவியும் பிராவில் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவன் கூறுகையில், பலாத்காரம் நடைபெறும்போது, சம்மந்தப்பட்ட பெண்ணின் பிராவை குற்றவாளிகள் கழற்ற முயலுவது, பெரும்பாலும் வழக்கமானது. இதை கருத்தில்கொண்டுதான் ஷாக் அடிக்கும் கருவியை அதில் பொருத்தியுள்ளேன். கடந்தாண்டு நடந்த டெல்லி மாணவி பலாத்கார சம்பவம்தான் இதுபோன்ற கருவியை கண்டுபிடிக்க உத்வேகம் அளித்தது என்றார்.
பலாத்காரம் செய்பவர்களுக்கு இந்த பிரா ஷாக் அடிக்கும் என்றபோதிலும், அதை அணிந்துள்ள பெண் ஆடை மாற்றும்போது, ஷாக் அடிக்காதாம். இதை எப்படி கழற்றினால் ஷாக் அடிக்காது என்பதற்கும் கண்காட்சியின்போது விடையுள்ளது.