For Daily Alerts
Just In
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை- பல அரிய அறியாத உண்மைகள்...
டெல்லி: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தொடர்ந்து நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புதான் இது. நாட்டின் 68வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முக்கிய நிகழ்வுகளை அசைபோடுவது, நாளைய சந்ததிக்கு வரலாற்றை நகர்த்தி செல்லும் முயற்சியாக இருக்கும் என்று நம்புவோம்.
1947ம் ஆண்டு ஜூன் 3ம்தேதியே இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தானையும், பிற மக்களுக்காக இந்தியாவையும் உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. பிரிட்டீஷ், காங்கிரஸ், முஸ்லிம்லீக் இணைந்து இம்முடிவை எட்டியிருந்தன. இதன் பிறகு நடந்த வரலாற்று தொடர்ச்சியை கீழே பார்க்கலாம்.
- ஆகஸ்ட் 15ம்தேதியே இந்தியா-பாகிஸ்தான் சுதந்திரத்தை பெற்றுவிட்டாலும், 17ம்தேதிவரை இந்திய பாகிஸ்தான் எல்லை வகுக்கப்படவில்லை.
- இந்தியா-பாகிஸ்தான் நடுவே எல்லைக்கோட்டை உருவாக்கியவர் பெயர் சிரில் ஜோன்ரட்கிளிப். இவர் பிரிட்டீஷ் வழக்கறிஞர்.
- ஜோன்ரட்கிளிப் எல்லைக்கோட்டை வகுத்தபோது, இந்துக்களும், சீக்கியர்களும் பெரும்பான்மையாக இருந்தபகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் அதிகம் இருந்த பகுதியை பாகிஸ்தானுக்குமாக பிரித்தார்.
- 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம்தேதிதான், ரட்கிளிப் எல்லைக்கோடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதாவது நாடு பிரிக்கப்பட்ட இரு நாட்கள் கழித்து.
- பஞ்சாப் மாகாணம் மற்றும் வங்காளத்தை இரண்டாக பிரித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு தலா 4,50,000 சதுர கிலோமீட்டர் கிடைக்கும்படியும், தலா 88 மில்லியன் மக்கள் இரு நாடுகளுக்கும் வரும்படியும் பார்த்துக்கொண்டார் ஜான் ரட்கிளிப்.
- இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சம். இதில் பஞ்சாப் பகுதியில் மட்டும், 5 லட்சம் முதல் 8 லட்சம்வரையில் உயிரிழந்திருந்தனர். 1 கோடி மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வேறு பகுதிக்கு இடம் பெயர நேர்ந்தது.
- ரட்கிளிப் குறித்த இன்னொரு சுவையான தகவலும் உள்ளது. இந்தியாவை இரு நாடாக பிரித்த அவருக்கு இதன் புவியியல் குறித்து அவ்வளவாக தெளிவு கிடையாதாம். வரைபடம், ஜாதி மற்றும் மதத்தின் எண்ணிக்கைகளை வைத்து ஒரு யூகத்தில் நாட்டை பிரித்துள்ளார். பிரிவினைக்கு முன்பு ஒரு நாள் கூட ரட்கிளிப் இந்தியாவுக்கு வந்தது கிடையாது.
- 1947ம் ஆண்டு ஜூலை 8ம்தேதி ரட்கிளிப்பை இந்தியாவுக்கு வரவழைத்தபோதுதான் அவருக்கு நாடு பிரிக்கும் பணி ஒதுக்கப்பட்டிருந்ததை பிரிட்டீஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவை 5 வாரங்களுக்குள் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று ரட்கிளிப்புக்கு காலக்கெடு நிர்ணயித்தது பிரிட்டீஷ் அரசு.
- இந்தியா, பாகிஸ்தான் நாட்டு வரைபடத்தை 1947 ஆகஸ்ட் 9முதல் 14ம்தேதிக்குள் ரட்கிளிப் இறுதி செய்தார். ஆனால் சர்ச்சை காரணமாக சுதந்திர தினத்துக்கு முன்பு அந்த வரைபடத்தை அரசு இறுதி செய்யவில்லை.மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத், மால்டா ஆகிய மாவட்ட மக்கள் நாடு பிரிந்த தினத்தன்று தங்களது வீடுகளில் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி வைத்திருந்தனர். ஏனெனில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அது பாகிஸ்தானுடன் சேர்ந்திருக்கும் என்று அவர்கள் நம்பினர். ஆனால் பிறகுதான் தெரிந்தது தாங்கள் இந்தியாவில்தான் உள்ளோம் என்று.
ஆனால் அதே நேரம் 2 சதவீதம் மட்டுமே முஸ்லிம்களை கொண்டிருந்த சிட்டகாங் மாவட்டம், பாகிஸ்தானுக்கு (தற்போது பங்களாதேஷ்) நாட்டுக்கு பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது.
Comments
English summary
The partition of the Punjab in mid-August 1947 took place as part of a negotiated settlement brokered by the British between the Indian National Congress, the All-India Muslim League and the Sikhs of Punjab to partition India and transfer power to India and Pakistan.