மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்-ஜெயலலிதா சென்னையில் திடீர் சந்திப்பு
சென்னை: பிரதமரின் ஜன்தன் திட்டத்தை தொடங்கி வைக்க இன்று சென்னை வந்த மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைவருக்கும் வங்கி சேவை வழங்கும் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது. மாநிலந்தோறும், மாவட்டந்தோறும் நாடு முழுவதும் ஒரேநாளில் 600 மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக ரவிசங்கர் பிரசாத் சென்னை வந்தார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், மாலை 6 மணிக்கு தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு வருகிறார். இங்கு வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதனிடையே பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் முன்பாகவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது இலத்தில் சந்தித்து ரவிசங்கர் பிரசாத் ஆலோசனை நடத்தினார். மரியாதை நிமித்தமாக இருந்த சந்திப்பு நிகழ்ந்ததாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.