செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைய மங்கள்யான் ரெடி: விஞ்ஞானிகள்
பெங்களூரு: மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைய தயாராக உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தரைகட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ அறிவியல் செயலாளர் கோட்டேஷ்வர ராவ், திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது அவர்கள், ‘‘செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்' விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இது தனது மொத்த பயண தூரத்தில் 98 சதவீதத்தை கடந்து உள்ளது என்றனர்.
இந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தை நெருங்கியுள்ளது. விண்கலம் செலுத்தப்பட்ட பின் 6 முறை அதன் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டது. விண்ணில் இதுவரை 3 முறை திருத்தம் செய்யப்பட்டு விண்கலம் சரியான பாதையில் செலுத்தப்பட்டு உள்ளது.
மீண்டும் வருகிற 22-ந் தேதி கடைசியாக ஒரு சிறிய திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதைத்தொடர்ந்து இந்த விண்கலம் 24-ந் தேதி காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் நீள்சுற்றுவட்டப்பாதையை அடையும்.
செவ்வாயில் நிலை நிறுத்தம்
செவ்வாய் கிரகத்தின் வான்வெளி கோளப்பாதையில் மங்கள்யான் விண்கலமானது செவ்வாய் கிரகத்துக்கு 515 கிலோ மீட்டர் அருகிலும், 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் வகையில் நிலை நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சுற்றிவந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.
ஆய்வுத் தகவல்கள்
அந்த விண்கலத்தில் இருந்து ஆய்வு தகவல்கள் பெங்களூர், அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் பெறப்படும்.
இந்தியாவிற்குப் பெருமை
எங்களின் இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால் செவ்வாய் கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். கடந்த காலங்களில் வேறு நாடுகளின் முதல் முயற்சி எதனால் தோல்வியில் முடிந்தது என்பதையும் நாங்கள் ஆய்வு செய்து பார்த்தோம்.
மோதல் ஏற்படாது
வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள விண்கலங்களால் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் விண்கலங்களுக்கு இடையே எந்த மோதலும் நடைபெற வாய்ப்பு இல்லை.
ஆரோக்கியமாக உள்ளது
செவ்வாய் கிரகத்தை விண்கலம் அடைந்ததும் அன்றைய தினமே புகைப்படம் எடுத்து அனுப்பும். அது எந்த அளவுக்கு தெளிவாக இருக்கும் என்று தெரியாது. அங்கிருந்து பூமிக்கு தகவல் வர 12 நிமிடங்கள் ஆகும். விண்கலம் ஆரோக்கியமாக உள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விண்கலம் 6 மாதம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் கோட்டேஷ்வர ராவ், மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் தெரிவித்தனர்.
வேகம் குறைப்பு
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கும்போது அதன் வேகம் குறைக்கப்படும். செவ்வாய் கிரகத்தை பின்நோக்கி செல்லுமாறு அதன் வேகம் குறைக்கப்படும் திட்ட துணை இயக்குனர் பிச்சைமணி தெவித்தார்.
ஐந்து ஆய்வுக்கருவிகள்
இதில் 5 ஆய்வு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. மீத்தேன், காற்று மண்டலம், வெப்பம், தாதுக்கள் போன்றவற்றை இந்த கண்டறியும் கருவிகள் உள்ளன. மேலும் ஒரு வண்ண கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் மொத்தம் 685 மில்லியன் அதாவது 68.5 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைகிறது.
இலக்கை எட்டும்
பூமி சுற்றி வருவதால் விண்கலம் இலக்கை அடைந்ததும் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையேயான தூரம் 224 மில்லியன் கிலோ மீட்டராக குறைந்துவிடும்'' என்றார்.
ரூ. 450 கோடியில்
மங்கள்யான் விண்கலத்தின் திட்ட மதிப்பீடு ரூ.450 கோடி ஆகும். இந்த விண்கலம் விண்வெளியில் இதுவரை 315 நாட்கள் பயணம் செய்துள்ளது. இன்னும் 8 நாட்களில் செவ்வாய் கிரகத்தின் கோளப்பாதையை வெற்றிகரமாக சென்று அடைய இருக்கிறது.