நிதின் கத்காரி வீட்டின் படுக்கை அறையில் ஒட்டுக் கேட்புக் கருவிகள் சிக்கியதா?
டெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கத்காரியின் வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவிகள் சிக்கியதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். இது ஊகமான செய்தி என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சன்டே கார்டியன் இதழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்புக் கருவிகள் அமைச்சர் நிதின் கத்காரியின் படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கத்காரியின் அரசு வீட்டில்தான் இந்த கருவிகள் சிக்கியுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறியது.
தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உடனடியாக அதை செயலிழிக்க வைக்க உத்தரவிடப்பட்டதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவித்தது.
ஆனால் இதை கத்காரியே தற்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் கருத்து தெரிவிக்கையில் எனது வீட்டுப் படுக்கை அறையில், சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும் கருவிகள் சிக்கியதாக வெளியான செய்தி முற்றிலும் யூகமானது, தவறானது. அப்படி எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் கத்காரி.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் மோடிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். வழக்காக மேற்கத்திய நாடுகளில்தான் இப்படிப்பட்ட கருவிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம் என்பதால் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.