நீதிபதிகள் ஓய்வுக்குப் பின்னர் எந்த ஒரு பதவியையும் ஏற்க கூடாது: முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
கேரளா மாநில ஆளுநராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் நியமிக்கப்பட இருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
அதே நேரத்தில் சதாசிவம் நியமனத்துக்கு கேரளா காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், ஓய்வு பெறும் நீதிபதிகள் ஆளுநர் பதவி உட்பட எந்த ஒரு பதவியையும் ஏற்க எந்த ஒரு தடையும் இல்லைதான். ஆனாலும் ஓய்வு பெற்ற பின்னர் 2 ஆண்டுகாலத்துக்கு எந்த ஒரு பதவியையும் ஏற்காமல் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் விசாரணை கமிஷன் தலைவர் பொறுப்புகளை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தாமஸ் கூறியுள்ளார்.
நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட இருப்பது இதுவே முதல் முறை என்பதால் விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.