பிரச்சாரத்திற்கு வந்த நடிகைகள் மீது தூசி படாமல் இருக்க சாலைகளை கழுவிய அதிகாரிகள்
பங்குரா: நடிகைகள் மூன்மூன் சென், ரியா சென் மற்றும் ரைமா சென் ஆகியோர் பிரச்சாரம் செய்ய வந்ததால் மேற்கு வங்கத்தில் உள்ள கிராமம் ஒன்றின் சாலைகளை தூசி இல்லாமல் தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை மூன்மூன் சென். அவரது மகள்களான ரைமா மற்றும் ரியா சென் ஆகியோர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமூல் கட்சி சார்பில் பங்குரா தொகுதியில் நடிகை மூன்மூன் சென் போட்டியிடுகிறார்.
பிரச்சாரம்
மூன்மூன் சென் பங்குரா தொகுதிக்குட்பட்ட சியாமாபூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தனது மகள்களுடன் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தார்.
சாலைகள்
மூன்மூன் சென் மற்றும் அவரது மகள்கள் மீது தூசி படாமல் இருக்க சியாமாபூர் கிராம சாலை 3 கிமீ தூரம் வரை தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டுள்ளது.
தண்ணீர்
கோடை காலத்தில் குடிக்கவே நீரை காணவில்லை. இதில் நீரை இப்படி சாலைகளை கழுவ பயன்படுத்துகிறார்களே என்று சியாமாபூர்வாசிகள் கடுப்பாகியுள்ளனர். பின்னர் தான் அவர்களுக்கு நடிகைகளுக்காக சாலைகள் கழுவப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது. என் வாழ்வில் நான் சியாமாபூர் சாலை கழுவப்பட்டு பார்த்ததே இல்லை என்று 70 வயது மூதாட்டியான லக்ஷ்மி தேவி என்பவர் தெரிவித்துள்ளார்.
பங்குரா
பங்குரா மாவட்டத்தில் ஒவ்வொரு கோடை காலத்திலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏன் வீட்டுத் தேவைகளுக்கு கூட குழாய்களில் நீர் வருவது இல்லை. இந்நிலையில் நடிகைகளுக்காக நீரை வீணடித்துள்ளது மக்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது.
ரியா சென்
பஞ்சாயத்து ஆட்கள் சாலையை கழுவிய பிறகும் திறந்த ஜீப்பில் வந்த நடிகை ரியா சென் தனது கண்ணில் தூசி விழுவதாதக் கூறி அவ்வப்போது கண்களை தேய்த்துள்ளார். ஆனால் அவர்கள் சென்ற சாலை முழுவதும் ஈரமாக இருந்தபோதிலும் தூசியாக இருப்பதாக ரியா தெரிவித்துள்ளார். ரியா சென் பிரசாந்துடன் சேர்ந்து குட் லக் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலைவர்கள்
மக்கள் குடிக்க, புழங்க தண்ணீர் இல்லாமல் திண்டாடும்போது இந்த நடிகைகளுக்காக சாலைகளை கழுவியுள்ளனர். இப்படிபட்டவர்கள் எப்படி அந்த தொகுதி மக்களுக்காக போராட முடியும். நான் தினமும் பிரச்சாரத்திற்கு செல்கிறேன். என் மீது தூசி படிகிறது. வீட்டுக்கு சென்று குளித்துவிடுகிறேன் என்று பங்குரா தொகுதியில் இருந்து 9 முறை தேர்வு செய்யப்பட்ட எம்.பி.யான பாசுதேவ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
ரைமா
திறந்த ஜீப்பில் ஏறியதில் இருந்து மூன்மூன் சென்னின் மூத்த மகளான ரைமாவுக்கு கூட்டத்தை நோக்கி முத்தங்களை பறக்கவிடுவது தான் வேலையாக இருந்தது.
முடி
அக்கா ரைமா முத்தங்களை பறக்கவிட தங்கை ரியாவோ யாரையும் கண்டுகொள்ளாமல் தலைமுடியை சரி செய்வதிலேயே குறியாக இருந்தார். மகள்களின் செயலை பார்த்த அம்மா மூன்மூன் சுதாரித்துக் கொண்டு கூடியிருந்த மக்களை பார்த்து நமஸ்தே என்றார்.