சீமாந்திரா சட்டசபைக்கு பஸ்சில் வந்த எம்.எல்.ஏ ரோஜா
ஹைதரபாத்: நடிகையாக இருந்து நகரி தொகுதியில் வெற்றி பெற்ற ரோஜா முதன் முறையாக சீமாந்திரா சட்டசபைக்கு பஸ்சில் வந்து எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
சீமாந்திராவின் முதல்வராக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றார். மாநில பிரிவினைக்கு பிறகு சீமாந்திரா சட்ட சபையின் முதல் கூட்டத் தொடர் ஹைதராபாத் பழைய தலைமை செயலக கட்டிடத்தில் இன்று காலை 11.52 மணிக்கு கூடியது.
தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்ற பதிவாடா நாராயணசாமி சபையை நடத்தினார். புதிய உறுப்பினர்களுக்கு அவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சந்திரபாபு நாயுடு
முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்.
பஸ்சில் வந்த ரோஜா
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபைக்கு பஸ்சில் வந்து இறங்கினர். ஹைதராபாத் பஞ்சா குட்டாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சிலைக்கு மாலை அணி வித்து விட்டு பஸ்சில் வந்தனர். அவர்களுடன் நடிகை ரோஜாவும் பஸ்சில் வந்தார்.
ரோஜா பதவியேற்பு
சட்டசபை வந்தடைந்த அவர்கள் அங்குள்ள காந்தி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சபையில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் நடிகை ரோஜா எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
எதிர்கட்சியாக செயல்படுவோம்
முன்னதாக நடிகை ரோஜா கூறும் போது, ‘‘அமல்படுத்த முடியாத வாக்குறுதிகளை கூறி சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்து உள்ளார். அவர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அப்படி அல்லாமல் மக்களை ஏமாற்ற நினைத்தால் மக்கள் ஆதரவுடன் எதிர்த்து போராடுவோம். வாக்குறுதியை நிறைவேற்றும் வரை ஓய மாட்டோம்'' என்றார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சியாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.
போலீஸ் பாதுகாப்பு
சட்டசபை கூட்டத் தொடர் 5 நாட்கள் நடைபெறுகிறது இதையொட்டி ஹைதரபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.