மோடியை விமர்சிப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை... பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை
டெல்லி: நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசுபவர்களுக்கு இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்று பீகார் பாஜக தலைவர் கிரிராஜ் சிங் பேசிய பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கிரிராஜ் சிங் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சிங் பேசுகையில், நரேந்திர மோடி பிரதமர் ஆவதைத் தடுக்க நினைப்போர் பாகிஸ்தானை நோக்கி போக வேண்டியதுதான். வரும் நாட்களில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது. அவர்கள் பாகிஸ்தானில்தான் போய் புகலிடம் அடைய வேண்டும் என்றார் சிங்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வராத கட்சிகளையெல்லாம் அவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்களா... அப்படிப் பார்த்தால 99 சதவீத நாட்டு மக்களை அவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டியிருக்கும். காரணம் 99 சதவீதம் பேர் மோடியை எதிர்த்துத்தான் ஓட்டளிக்கப் போகிறார்கள் என்றார்.
பீகார் மாநிலம் நெவாதா தொகுதியில் சிங் போட்டியிடுகிறார். நேற்று நடந்த கூட்டததில் அவர் பேசியபோது மேடையில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.