ஸ்மார்ட் சிட்டிகள், கிராமங்களில் இன்டர்நெட்.. ரூ.1,11,824 கோடி ஆந்திர பட்ஜெட்டில் அறிவிப்பு
திருப்பதி: பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் முதலாவது பட்ஜெட் ரூ.1,11,824 கோடி செலவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ராமகிருஷ்ணடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கடந்த ஜூலை மாதம் 2ம்தேதி முதல் ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா புதிய மாநிலமானது. இந்நிலையில் பிரிக்கப்பட்ட ஆந்திராவை தெலுங்கு தேசமும், தெலுங்கானாவை, தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சியும் ஆட்சியை பிடித்தன. பிரிக்கப்பட்ட ஆந்திராவின் முதலாவது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
விவசாய கடன் தள்ளுபடி
ராமகிருஷ்ணடு பட்ஜெட் தாக்கல் செய்து பேசுகையில், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியில், விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெலுங்கு தேசம் அறிவித்திருந்தது. ஆனால், மாநிலத்தில் தற்போது மிகுந்த நிதி பற்றாக்குறை உள்ளதால் ஒரு குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
ஐடி துறையை ஈர்க்க முடிவு
அதிகளவில் தொழிற்சாலைகளை கொண்டுவரவும், ஐடி துறை பார்வையை ஆந்திராவை நோக்கி திருப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
சித்தூரில் ஐஐடி
சித்தூர் அல்லது காக்கிநாடா பகுதியில் ஐஐடி நிறுவனம், திருப்பதியில் ஹோட்டல் மேலாண்மை, காக்கி நாடாவில் தனியார் உதவியுடன் மேலும் ஒரு துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமங்களில் இன்டர்நெட்
கிராம வளர்ச்சிக்காக ரூ.6 ஆயிரத்து 94 கோடியும், சாலை வசதிக்கு ரூ.2ஆயிரத்து 612 கோடியும் வனத்துறை, சுற்றுசூழல், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு ரூ.418 கோடியும், உயர் கல்விக்கு ரூ.2 ஆயிரத்து 75 கோடியும்ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்கள் அனைத்துக்கும் இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டிகள்
விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டினம் விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் விமான நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.