மரபணு மாற்ற பயிர் சோதனைக்கு அனுமதி- ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்புகள் எதிர்ப்பு!
டெல்லி: இந்தியாவில் மரபணு மாற்றப் பயிர்களை சோதனை அடிப்படையில் சாகுபடி செய்வதற்கு பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் சார்பு அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
அரிசி, கத்திரிக்காய், கொண்டைக்கடலை, கடுகு, பருத்தி ஆகியவற்றில் மரபணு மாற்ற பயிர் சோதனை நடத்துவதற்கு மரபணு ஆராய்ச்சி ஒப்புதல் குழு அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகரை ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய சுதேசி விழிப்புணர்வு இயக்கம், பாரதீய கிஸான் சங்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்தனர்.
அப்போது பிரகாஷ் ஜவதேகரிடம், அரிசி, கத்திரிக்காய், பருத்தி உள்ளிட்ட பயிர்களில் மரபணு மாற்றப் பயிர்ச் சோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரகாஷ் ஜவதேகர், ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பினர் என்னை சந்தித்தனர். மரபணு மாற்றப் பயிர்களை சோதனை அடிப்படையில் சாகுபடி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றார்,