1947க்கு பிந்தைய ரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்த ஆர்.எஸ்.எஸ்.கோரிக்கை!
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறது.
அண்மையில் இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவருமே இந்துக்கள்தான் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் 1947ஆம் ஆண்டுக்குப் பின்னரான அனைத்து அரசின் ரகசிய ஆவணங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப் படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் இந்த கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜித் மேனன் கூறுகையில், நாட்டில் தேவையில்லாத சர்ச்சைகள், விவாதங்களை ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் உருவாக்குகிறது அரசு ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை இப்போது இல்லை என்றார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரியும் ஆர்.எஸ்.எஸ். கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.