அச்சுதானந்தனோடு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் சந்திப்பு
திருவனந்தபுரம்: கேரளத்தின் முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தனை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கூடங்குளத்தில் 3 4 அணு உலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அணு உலைகள் அமைப்பதை எதிர்க்க வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைவர்கள் சுப. உதயகுமார்,சேசுராஜ், பீட்டர் மில்டன், அன்டனி கெபிஸ்டன் ஆகியோர் அச்சுதானந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை வைத்துப் பேசினார்கள்.
மேலும் தேனி மாவட்டம் தேவாரத்தில் திட்டமிடப்படும் நியுட்ரினோ திட்டத்தைப் பற்றியும் பேச்சு எழுந்தது. அதுவும் ஒரு மக்கள் விரோதத் திட்டம் என்பதால் அதையும் எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
விரைவில் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரின் போராட்டத்திற்கு கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தலைமை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.