சஹரன்பூர் கலவரம்: நான்கு மணி நேரத்திற்கு ஊரடங்கு தளர்வு
சஹரன்பூர், உ.பி: உ.பி. மாநிலம் சஹரன்பூரில், இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டு கலவரமான நிலையில் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் இன்று 4 மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து சஹரன்பூர் பகுதியில் மயான அமைதி காணப்படுகிறது. போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்த மோதலில் 38 பேர் கைது செய்ய்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குருத்வாரா கட்டுவதற்காக சீக்கிய அமைப்புகள் முயற்சி செய்தன. ஆனால் இதறகு இஸ்லாமியர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக எழுந்த மோதல் பெரும் கலவரமாக மாறி விட்டது. தற்போது இந்த விவகாரத்தை அரசியலாக்கி விட்டன உ.பி. கட்சிகள்.
சமாஜ்வாடி கட்சி வாக்கு வங்கி அரசியலை மேற்கொள்வதாக பாஜகவும், தேவையில்லாமல் இதை மதப் பிரச்சினையாக்க வேண்டாம் என்று சமாஜ்வாடியும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன. அதேசமயம், காங்கிரஸ் கட்சியோ, உ.பி. அரசின் தவறுகளே இந்தக் கலவரத்திற்குக் காரணம் என்று வர்ணித்துள்ளது.
நான்கு மணி நேர ஊரடங்கு தளர்வு
இதற்கிடையே இன்று 4 மணி நேர ஊரடங்கு தளர்வை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருட்கள வாங்குவதற்கு வசதியாக இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கை
இன்று மாலை மேலும் ஊரடங்கைத் தளர்த்துவது தொடர்பாக அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
மோதல் நடந்த பகுதிகளில் போலீஸாரும், புற ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 18 கம்பெனி கூடுதல் புறக் காவல் படையினரும், 6 கம்பெனி சிஆர்பிஎப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
சஹரன்பூரில் குருத்வாரா ஒன்று உள்ளது. இதன் விரிவாக்கத்திற்காக அருகில் உள்ள நிலத்தில் அவர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த இடத்தில் முன்பு மசூதி இருந்தது என்பதால் குருத்வாரா விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளூர் இஸ்லாமியர்கள் எதிர்ப்புதெரிவித்தனர். ஆனால் கோர்ட் உத்தரவைக் காட்டி சீக்கியர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து பெரும் கலவரமாகி விட்டது.