இறுதி மூச்சு இருக்கும் வரை இந்திய குடிமகள்தான்: கண்ணீருடன் சானியா மிர்சா
டெல்லி: தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தாம் இந்திய குடிமகள்தான் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநில நல்லெண்ண தூதராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டார். இதற்கு தெலுங்கானா மாநில பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டதால் சானியா மிர்சா பாகிஸ்தான் மருமகள்; அவரை எப்படி தெலுங்கானா தூதராக நியமிக்கலாம் என்றும் தெலுங்கானா பாரதிய ஜனதா தலைவர் லட்சுமணன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலடியாக, தாம் இந்திய குடிமகள்தான் என்று சானியா கூறி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சானியா மிர்சாவின் கண்ணீர் பேட்டி
இந்த நிலையில் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு நேற்று கண்ணீர் மல்க சானியா மிர்சா பேட்டி அளித்தார். அதில் சானியா மிர்சா கூறியிருந்ததாவது:
- நான் ஓர் இந்திய குடிமகள் என பலமுறை நிரூபித்து இருக்கிறேன். ஆனால் சிலர் இதனை அரசியலாக்குவது வருத்தமளிக்கிறது.
- நான் திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட நாட்டுக்காக விளையாடி வருகிறேன்.
- என்னை வெளிநாட்டு பெண்ணாக மருமகளாக சித்தரிக்க முயல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
- நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எனது முன்னோர்கள் இந்தியாவில்தான்.. அதுவும் ஹைதராபாத்தில்தான் வசித்து வந்துள்ளனர். இதனால் இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளமாட்டேன்
- ஆண்களின் சமூகம் என்பதால்தானோ என்னவோ இதுபோன்ற பிரச்சினைகளை நான் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. நான் இந்திய பாஸ்போர்ட்டைத்தானே வைத்துள்ளேன். நான் இந்திய குடிமகள்தான்.
- வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டதால் மட்டுமே ஒருபெண் வெளிநாட்டுக்காரர் ஆகிவிடுவாரா? இதுபோல் வேறு எந்த நாட்டிலும் நடப்பது கிடையாது.
- தெலுங்கானாவின் தூதராக நியமிக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன். தெலுங்கானாவுக்காகவும் தேசத்துக்காகவும் பாடுபடுவேன்.
- இவ்வாறு கண்ணீர் மல்க சானியா மிர்சா கூறினார்.