ஜெயலலிதாவை பார்க்க சிறைக்கு வந்த சரத்குமார்: தமிழகமே சோகத்தில் இருப்பதாக பேட்டி
பெங்களூர்: ஜெயலலிதா சிறையில் இருப்பதால் ஒட்டுமொத்த தமிழகமுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக சட்டசபை உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின், தென்காசி தொகுதி எம்.எல்.ஏவான, நடிகர் சரத்குமார், பெங்களூர் மத்திய சிறையிலுள்ள ஜெயலலிதாவை சந்திக்க இன்று வந்திருந்தார்.
சுமார் இரண்டு மணி நேரமாக காத்திருந்தும் இன்னும், இவருக்கு ஜெயலலிதாவை சந்திக்க அவகாசம் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு சரத்குமார் அளித்த பேட்டி:
ஜெயலலிதாவை சந்தித்து தமிழக மக்களின் மன நிலையை தெரியப்படுத்த வந்தேன். நாங்கள் எல்லாம் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம் என்பதை காண்பிக்கவும் வந்தேன். சொத்துக்குவிப்பு வழக்கு தொடங்கி 18 வருடங்கள் ஆகிவிட்டன. வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் இருமுறை தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவிக்கு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்த்தும் வகையில் ஆட்சி நடத்தியுள்ளார்.
எனவே தமிழக மக்களுக்கு ஜெயலலிதா மீது மிகுந்த அன்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் ஒட்டுமொத்த தமிழகமுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், 4 வருடம் சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம், 10 வருடங்கள் தேர்தலில் நிற்க தடை என்பது போன்ற தண்டனைகள்தான், தமிழக மக்களை பொருத்தளவில், மிகவும் மிகையாக தெரிகிறது.
மேலும், ஜெயலலிதா மீதான பாசத்தால் தமிழகத்தில் பல தொண்டர்கள் தற்கொலை செய்து வருவதாக அறிந்தேன். இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும். தற்கொலை செய்யும் கோழைத்தன முடிவை கைவிட வேண்டும் என்றார்.
2 மணி நேரமாக காத்திருந்தும் இன்னும் ஜெயலலிதாவை சந்திக்க முடியாதது குறித்து கேட்டதற்கு, "ஒவ்வொருவராக ஜெயலலிதா சந்திப்பார் என்று எதிர்பார்க்கிறேன். எல்லோரையும் ஒரே நேரத்தில் சந்திக்க முடியாது அல்லவா" என்றார். பேட்டி முழுவதையும் அவர் கன்னடத்திலேயே அளித்தார். பெங்களூரில் தினசரி பத்திரிகையொன்றில் சரத்குமார் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.