ஹலோ ராஜ்தீப்.. அர்னாப் மாதிரி பேசக் கூடாது: வெளுத்து வாங்கிய ராஜ்தாக்கரே!!
மும்பை: வட இந்திய ஊடகங்களில் நாட்டையே நிமிர்த்த பிறந்த ஊடக பிதாமகன்களாக காட்டிக் கொள்வோரில் ஒருவரான சி.என்.என்.-ஐ.பி.என். ராஜ்தீப் சர்தேசாய்க்கு சரியான கடிவாளம் போட்டிருக்கிறார் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே தடாலடி அரசியல்வாதி. மண்ணின் மைந்தர் கோஷத்தை முன்வைத்து அவர் முன்னெடுக்கும் போராட்டங்கள் ரத்தகளறியானவை.. பிற மாநிலத்தவரை அலற வைக்கக் கூடியவை.. அண்மையில் கூட சுங்கச் சாவடிகளை சூறையாட ராஜ்தாக்கரே கட்டளை பிறக்க அவரது தொண்டரடிப்பொடிகள் அச்சுபிசகாமல் அரங்கேற்றி அதிர வைத்தனர்.
அப்படிப்பட்ட ராஜ்தாக்கரேவை ஊடக அடாவடி பேர்வழிகளில் ஒருவரான சி.என்.என்.- ஐ.பி.என். தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் நேர்காணல் செய்தார். தொடக்கம் முதல் கடைசிவரை ராஜ்தீப் சர்தேசாயின் அத்தனை சவடால்களுக்கும் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார் ராஜ்தாக்கரே.
இன்டர்வியூ.. இன்டராகேசன் இல்லை
ராஜ்தாக்கரேயை பேசவிடாமல் வழக்கம்போல தமது பாணியிலேயே ராஜ்தீப் சர்தேசாய் மடக்குவதாக நினைத்து பேசிக் கொண்டிருந்தார். தடாலடியாக "ராஜ்தீப் இது இன்டர்வீயூ.. இன்டராகேசன் இல்ல... முதல்ல சேர்ல பின்னாடி தள்ளி உட்காருங்க.." என்று சொன்னார் ராஜ்தாக்கரே..
சவுண்டு விடக்கூடாது..
அதைத் தொடர்ந்து "ஓவரா.. சவுண்டு விடாம அமைதியா கேள்வியை கேளுங்க...மொத்தல்ல நான் பேசுறதை முழுசா கேளுங்க.. உங்க கையை பின்னாடி வையுங்க.. நீட்டாதீங்க... " என்று மீண்டும் ஒரு குத்துவிட்டார் ராஜ்தாக்கரே.. அதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் " பாம்பே இல்ல, அப்படி சொல்லாதீங்க.. மும்பை.. னு சொல்லுங்க" என்று திருத்தி சுட்டிக்காட்டினார் ராஜ்தாக்கரே.
அர்னாப் மாதிரி பேசாதீங்க..
பின்னர் சற்று கோபமடைந்தவராக, "அர்னாப் கோஸ்வாமி மாதிரி பேசாதீங்க.. முதல்ல நான் சொல்றதை கேளுங்க..." என்று ராஜ்தீப் பங்காளி அர்னாப்பையும் விவாத சந்தைக்கு இழுத்துவிட்டார் தாக்கரே.
மோடி பிரதமராகனும்
ராஜ்தாக்கரே இந்த பேட்டியில் திரும்ப திரும்ப சொன்னது, "எனக்கு மட்டுமல்ல பாஜகவுக்கே மோடி தேவை.. பாஜக அரசை அமைப்போம்னு பாஜகவே சொல்லலை, மோடி அரசு அமைப்போம்னு தான் சொல்றாங்க.. நான் தனிக் கட்சி. எனக்கு மோடி பிரதமராகனும். அவ்வளவு தான். பாஜகவுக்கு எனது ஆதரவு இல்லை. எனது கட்சி போஸ்டரில் மோடி படத்தை போட்டவனை கட்சியை விட்டே தூக்கிட்டேன்" என்று விவரித்தார்.
ராஜ்தாக்கரே.. ராஜ்தீப் சர்தேசாய் உரையாடலில் ஒரு சில:
யாருங்க அந்த மக்கள்..
ராஜ்தீப் சர்தேசாய்: நீங்கள் வட இந்தியர்களுக்கு எதிராக இருப்பதால் தான் ராஜ்நாத் உள்ளிட்ட தேசிய கட்சிகள் உங்களுடன் கூட்டணி அமைக்க தயாராக இல்லை?
ராஜ்தாக்கரே: நானா கூப்பிட்டேன். கட்காரி, முண்டே போன்றவர்கள் அவர்களாகத் தான் வீட்டுக்கு போன் செய்துவிட்டு வந்து கூட்டணிக்கு ஆதரவு கேட்டார்கள்.. எனக்கு அவர்கள் தராவிட்டாலும் எனக்கு பிரச்சனையில்லை. எனக்கு மராட்டிய மக்கள் ஓட்டு போதும்.
நீங்கள்.. மக்கள் சொன்னார்கள் மக்கள் சொன்னார்கள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் எந்த மக்களை சந்திக்கிறீர்கள்?. நீங்கள் டெல்லி ஸ்டுடியோவை விட்டே வெளியே வருவதில்லையே..
டெல்லியில உட்கார்ந்து கொண்டு...
உங்களைப் போன்றவர்கள் சேர்ந்து தான் ஆம் ஆத்மி கட்சியையே உருவாக்கினீர்கள். டெல்லியில் உட்கார்ந்து நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாதா...
ஏன் அடிக்கிறோம் தெரியுமா?
வட இந்தியர்களை ஏன் அடிக்கிறீர்கள் என்றே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே.. காரணத்தை கேட்க மாட்டீர்களா.. அது பற்றி நான் இன்னொரு தனி பேட்டி தர்றேன். இப்போ லோக்சபா தேர்தல் பற்றி மட்டும் கேளுங்கள்..
நீங்க ஏன் என்.டி.டி.விக்கு போகக் கூடாது?
ராஜ்தீப் சர்தேசாய்: நீங்கள் ஏன் சிவசேனாவுடன் சேரக் கூடாது
ராஜ்தாக்கரே: நீங்கள் ஏன் மீண்டும் என்டிடிவியில் வேலைக்குப் போகக் கூடாது. நீங்கள் ஏன் ஐபிஎன் சேனலை தொடங்குனீங்க...
இப்படித்தான் ராஜ்தீப் சர்தேசாய் என்ற ஊடக பந்தா குதிரைக்கு செம கடிவாளம் போட்டார் ராஜ்தாக்கரே.