சோலார் பேனல் ஊழல்: மோதிக்கொள்ளும் அச்சுதானந்தன்- சரிதா நாயர்!
திருவனந்தபுரம்: பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்திய அச்சுதானந்தன் மீது அவதூறு வழக்குத் தொடரப் போவதாக சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகியுள்ள சரிதா நாயர் கூறியுள்ளார்.
அதேசமயம், நேர்மை பற்றியும், அவதூறு பற்றியும் பேச சரிதா நாயருக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை என்று அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
என்னைக் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் மீது வழக்கு தொடரப்போவதாக சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் பொருத்தி தருவதாக கூறி கேரளாவில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2வது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
எதிர்கட்சிகள் போராட்டம்
கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக் கொண்டு இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அமைச்சர்களுடன் தொடர்பு
இந்நிலையில், சரிதா நாயருடன் கேரள மத்திய அமைச்சர் உள்பட சில அரசியல்வாதிகள் உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்ததாகவும், அது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் அறிவித்தார். பிஜு ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் ஜேக்கப் மாத்யூசுவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.
அவதூறு வழக்கு
இதையடுத்து, சிறையில் உள்ள சரிதா நாயரை அவரது வழக்கறிஞர் பெனி பாலகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பிஜு ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் எனது கட்சிக்காரர் சரிதா நாயர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அதை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் மீது வழக்கு தொடரவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் எனது கட்சிக்காரர் சரிதாநாயர் முடிவு செய்துள்ளார்'' என்றார்.
கொதிக்கும் அச்சுதானந்தன்
இது குறித்து கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன், "பெண்களை அவமதிக்கும் நோக்கத்தில் இந்தக் கருத்தை நான் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளை முதல்வர் உம்மன் சாண்டி பாதுகாத்து வருவதை வெளிப்படுத்தவே அவ்வாறு கூறினேன். இது தொடர்பாக என்மீது தொடரப்படும் வழக்கு குறித்து நான் பயப்படவில்லை' என்று கூறினார்.