மு.க.ஸ்டாலின், உதயநிதி மீதான நில அபகரிப்பு வழக்கு- 31–ந் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் 31-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கு என்ன?
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமது நிலத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வேணுகோபால் ரெட்டி என்கிற தங்களின் பினாமியின் பெயருக்கு மிரட்டி வாங்கியதாக' சென்னை உயர்நீதிமன்றத்தில் சேஷாத்ரி என்பவர் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
பின்னர் இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மற்றும் மனுதாரர் சேஷாத்ரி தரப்பில் சமரசம் செய்து கொண்டதாக இருவரும் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனால் அந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
தமிழக அரசு மேல்முறையீடு
ஆனால் இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது குற்ற வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டாலும், மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் எல்.என்.ராவ் ஆஜராகினார். அத்துடன் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க கால அவகாசம் தேவை என மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் அந்தியார்ஜூனா வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.