'கூடங்குளம்' உதயகுமார் உள்ளிட்டோரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: லோக்சபா தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார் உள்ளிட்டோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் மீது கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன .இந்த வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வழக்குகள் இதுவரை வாபஸ் பெறப்படவில்லை.
கூடங்குளம் போராட்டக் குழுவினர் ஆம் ஆத்மியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அவர் இடிந்தகரையிலேயே தங்கி பிரசாரம் செய்து வருகிறார். முதல் முறையாக இடிந்தகரையில் இருந்து இன்று வெளியேறி நாகர்கோவில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இடிந்தகரையை விட்டு வெளியேறும் போது அவர் போலீசாரால் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் போராட்டக் குழுவினருக்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார்.
அதன் பின்னர் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் அதுவரை கூடங்குளம் போராட்டக் குழுவினரை கைது செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.