இந்திய சரித்திரத்தின் புதிய மைல் கல் 'மூன்றாம் பாலின"த்துக்கான அங்கீகாரம்
டெல்லி: இந்திய சரித்திரத்தில் புதிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய திருநங்கைகளை "மூன்றாம் பாலின"த்தவராக அங்கீகாரிக்கும் தீர்ப்பு..
பிறப்பு- இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் தொடக்கம் அனைத்து விண்ணப்பங்களிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் ஒரு பிரிவு 'ஆண்/ பெண்" என்பதுதான்.. ஆனால் ஆணாகவும் பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கைகளாக இருப்பவர்கள் இத்தகைய எந்த ஒரு விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்த எந்த ஒரு உரிமை, சலுகையை அனுபவிக்க முடியாத துயரம்தான் ஆண்டாண்டுகாலமாக இருந்து வந்தது.
இதனால்தான் சமூகத்தில் இழிநிலை பிறவிகளாக "திருநங்கைகள்" நடத்தப்படுகிற அவலமும்.. இழிநிலை பாதையை நோக்கி பயணிக்கிற அவலமும் உருவானது.
மூன்றாம் பாலினம் தீர்ப்பு
இதற்கு தீர்வு காணும் வகையில்தான் உச்சநீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்திருக்கிறது. இனி அத்தனை அத்தனை ஆண்/பெண் உரிமைகள், சலுகைகள் அனைத்துமே திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கும் கிடைக்கும்.
தொடக்க புள்ளி
இந்த தீர்ப்பு இந்திய சமூக அமைப்பில் ஆண்/ பெண் என்ற இரு பாலினத்தவருக்கு அப்பாலும் ஒரு மனித சமூகம் இருக்கிறது என்பதை அங்கீகரித்து அவர்களையும் சக மனிதர்களாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இது மிக மிக முதன்மையான தொடக்கப் புள்ளி.
அடிப்படை உரிமைகள்
அடிப்படையான வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற அனைத்தும் அந்த மூன்றாம் பாலினத்துக்குரியவராகிறது. இதில் மிக முக்கிய அம்சமாக திருநங்கைகள் அதிகம் சட்ட ரீதியாக பாதிக்கப்படுவது அரசியல் சாசனத்தின் 377வது பிரிவு. ஓரினச் சேர்க்கை தொடர்பான இந்த பிரிவில் அதிகம் துயரப்படுவது, திருநங்கைகள்.
கல்வி,வேலை வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோர்
இனி அவர்கள் மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் வழங்கப்படும் போது சக மனிதர்களைப் போல அனைத்தும் பெற்றவர்க்ளாகிவிடுகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிலும் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இது மிகவும் வரவேற்கத்தக்க முக்கிய அம்சம்.
அனைத்து அங்கீகாரத்துடன்...
இதுநாள் வரை ஏதோ ஏதோ தொழில் செய்து கேலிப் பொருளாக இந்த சமூகத்தினால் பார்க்கப்பட்ட ஒரு சமூகம் முதல் முறையாக அங்கீகாரத்துடன் அடையாளத்துடன் கல்வி, வேலை வாய்ப்பு என சகல துறைகளிலும் கால்பதிக்க வழிவகுத்துக் கொடுத்திருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிச்சயம் ஒரு மைல்கல் தான்..
இனி திருநங்கைகள் நம் அருகே சக ஆணைப் போல/ பெண்ணைப் போல அனைத்து உரிமைகளோடு நடமாட முடியும்.. அவர்கள் நாம் வாழும் சமூகத்தின் அங்கமே!