அரசு விளம்பரத்தை கட்டுப்படுத்த குழு: சுப்ரீம்கோர்ட் அதரடி
டெல்லி: மக்களின் வரிப் பணத்தை செலவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயலும் ஆளும்கட்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை அமைப்பதற்கு குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நீதித்துறை அகாடமியின் முன்னாள் இயக்குனர் மாதவ மேனன் தலைமையில் இக்குழு செயல்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகள் தொடங்கி, நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் வரை மத்திய, மாநில கட்சிகள் சார்பில் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் விளம்பரப்படுத்தப்படுகிறது.
ஆளும்கட்சிகளின் அரசு இயந்திரத்தின் சார்பில் வெளியிடப்படும் இந்த விளம்பரங்களின் மூலம் ஆளும்கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றனர். மக்களுக்கு இதனால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
இதனை தடுக்கும் வகையில் கடைபிடிக்க வேண்டிய தெளிவான வழிகாட்டி நெறிமுறைகளை அமைக்குமாறு அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ‘அரசு மக்களுக்கு செய்துள்ள பணிகளையும், அரசின் திட்டங்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதில் எந்த தவறும் இல்லை' என்று தெரிவித்திருந்தார்.
அந்த வழக்கினை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை அரசுக்கு பரிந்துரைக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
அரசியல் லாபத்துக்காக தலைவர்கள் விளம்பரம் செய்வதை தடுக்கும் வகையில் நெறிமுறைகள் மற்றும் அரசின் விளம்பத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகளை இந்த குழு வகுக்கும் என்றும், வழிகாட்டுதல் நெறிமுறை பற்றி 3 வாரத்தில் குழு அறிக்கை அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.