சுப்ரீம் கோர்ட் கருத்துப்படி கிரிமினல் அமைச்சர்களை மோடி நீக்க வேண்டும்: காங். போர்க்கொடி!
டெல்லி: உச்சநீதிமன்ற கருத்துப்படி கிரிமினல் பின்னணி கொண்ட அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.
கிரிமினல் பின்னணி அமைச்சர்களை நீக்கக் கோரும் பொதுநலன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர்களை தங்களால் நீக்க முடியாது என்று கூறியது. அத்துடன், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் பிரதமர் மற்றும் முதல்வர்கள் இத்தகைய கிரிமினல் அமைச்சர்களை சேர்க்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி கூறியதாவது:
தேர்தலுக்கு முன்பாகவும் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவும் பொதுக்கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி, தாம் ஊழலுக்கு எதிராக போராடுகிறேன்; தன்னுடைய அமைச்சரவையில் கிரிமினல்களுக்கு இடம் இல்லை என்று கூறி வந்தார்.
ஆனால் தற்போது உச்சநீதிமன்றமானது, மோடி அமைச்சரவையில் உள்ள 14 கிரிமினல் பின்னணி அமைச்சர்களை நீக்குங்கள் என்று மறைகமாக அறிவுரை வழங்கி உள்ளது.
கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் அமைச்சர்களை நீக்கி நடவடிக்கை எடுப்பது என்பது பிரதமரின் கடமையும் பொறுப்புமாகும்.
இவ்வாறு ரஷீத் ஆல்வி கூறினார்.
இந்த விவகாரம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் திவேதி கூறுகையில், கிரிமினல்களுக்கு நாடாளுமன்றத்தில் இடமே கூடாது. இத்தகைய கிரிமினல்களுக்கு சட்டசபையிலோ நாடாளுமன்றத்திலோ அமரவிடக் கூடாது. பொதுவாழ்க்கை என்பது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்றார்,