பத்மநாப சுவாமி கோயில் தங்க நகைகளை கடத்திய மன்னர் குடும்பத்தினர்: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து மன்னர் குடும்பத்தினரும் சில ஊழியர்களும் பொக்கிஷங்களை கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரையிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொக்கிஷங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவினர் ஏ என்ற ரகசிய அறை தவிர மற்ற அறைகளை திறந்து பொக்கிஷங்களை மதிப்பிட்டனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் சார்பில் கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை அறிய உதவி செய்வதற்காக கோபாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்த அவர், 2 மாதம் தங்கி பத்மநாபபுரம் கோயிலில் ஆய்வு நடத்தினார். ஊழியர்கள், மன்னர் குடும்பத்தினர் உள்பட பலரை சந்தித்து பேசினார். சில நாட்களுக்கு முன்பு அவர் உச்ச நீதிமன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் மன்னர் குடும்பத்தினர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நகைகளை கடத்தியதா மன்னர் குடும்பம்?
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- பத்மநாப சுவாமி கோயில் பொது சொத்து. ஆனால் கோயில் சொத்துக்களை தங்களுக்கு சொந்தமான சொத்துக்களாக கருதி மன்னர் குடும்பத்தினர் செயல்பட்டுள்ளனர்.
- மன்னர் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மறைமுக தொடர்புகள் உள்ளன. இவர்கள் ரகசிய அறைகளில் இருந்து பொக்கிஷங்களை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கோயிலுக்குள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்க முலாம் பூசும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளை கடத்தி அதற்கு பதிலாக போலி நகைகளை தங்க முலாம் பூசி ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் பி அறை பல முறை திறக்கப்பட்டுள்ளது. இந்த ரகசிய அறைக்கு மேலே ஒரு ரகசிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மர்மமாக உள்ளது.
- ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட 6 ரகசிய அறைகள் போக மேலும் 2 அறைகள் உள்ளன. இவற்றையும் திறந்து பரிசோதிக்க வேண்டும்.
-கோயில் நட்டத்தில் இயங்குவது போல் பொய் கணக்கு காட்டி வருகின்றனர். எனவே கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் குழு அமைக்கவேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.