தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்றக் கோரிய அதிமுகவினர் கோரிக்கை நிராகரிப்ப
அந்த மனுவை 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2000 ஆம் ஆண்டு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி அருகே பையூர் வேளாண்மை ஆராய்ச்சி மையத்திற்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேருந்தை தர்மபுரி அடுத்துள்ள இலக்கியம்பட்டியில் அதிமுக-வினர் தடுத்து நிறுத்தி மாணவ, மாணவிகள் உள்ளே இருந்த நிலையிலேயே பெட்ரோல் ஊற்றி பஸ்சை எரித்தனர்.
இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் உடல் கருகி பலியாயினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பத்தில், அதிமுகவினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது,
விசாரணையின்போது அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார், இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 28 பேரில் ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 25 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சேலம் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அல்தாப் அஹமத் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி குற்றவாளிகளுக்கு கீழ்க் கோர்ட்டுகள் விதித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதாடினர்.
அதிமுகவினர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார், இந்த வழக்கில் சாட்சிகள் நம்பகத்தன்மையுடன் இல்லை. அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அனுமானத்தின் அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலும் இவர்கள் செய்திருப்பார்கள் என்று கருதியும் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டதற்கான புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ள நிலையில் இம்மூவருமே பஸ்சை எரித்திருப்பார்கள் என்பது யூகமே. மேலும் வாக்குமூலங்களை முக்கிய சாட்சியாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
எனவே இவர்கள் மீது குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இல்லாததால் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.சவுஹான் ஆகியோர் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து 3 பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் மூன்று பேரும் தூக்கிலிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் 3 பேரும் தங்களது தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் இந்த மூன்று பேரும், தங்களது மனுவை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும், விசாரணையை பகிரங்கமாக நீதிமன்ற அறையில் நடத்தக் கூடாது என்று கோரியிருந்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது.
இதுதொடர்பாக உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை நீதிபதி அறையில்தான் நடைபெறும். அரசியல் சாசன பெஞ்ச் இதை விசாரிக்கத் தேவையில்லை. 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கலாம்.
மேலும், மரண தண்டனை கைதிகள் மூவரும் தங்களது மறு சீராய்வு மனுவை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யலாம் என்று கூறியிருந்தனர்.