For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் நலப்பணியாளர்கள் பணி ஆணை: ஹைகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நியமனம் வழங்குமாறு ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டின் பேரில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக அரசால் பணி அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011ம் ஆண்டு திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக, திமுக ஆட்சியில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவதும், அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் ஆவதும் இந்த பணியாளர்களுக்கு தொடர் கதையாகவே இருந்து வந்தது. 2011ல் மீண்டும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் ஹைகோர்ட் அளித்த தீர்ப்பில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபருக்குள் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றும் மாற்றுப் பணி வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட அவர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. பணியாளர்கள் சார்பில் வக்கீல் வில்சனும், தமிழக அரசு சார்பில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜரானார்.

வில்சன் வாதிடுகையில், அரசு பணியை எதிர்பார்த்து மக்கள் நல பணியாளர்களின் இளமை காலம் வீணாகிவிட்டது. 25 ஆண்டுகளாக இந்த வேலையை நம்பியே அவர்கள் உள்ளனர். இதில் பட்டினியால் 126பேர் உயிரிழந்துவிட்டனர், விரக்தியால் 26 பேர் தற்கொலை செய்துகொண்டனர். எனவே சென்னை ஹைகோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றார்.

முகுல் ரோகத்கி வாதிடுகையில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு போதிய கல்வி தகுதி கிடையாது. எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. வேலை பார்க்காத நிலையில் அவர்களுக்கு அரசு சம்பளமும் அளிக்காது என்றார்.

இதையடுத்து மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், அடுத்த மாதம் 27ம்தேதிக்குள், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பு நீதிமன்றத்தில் பதில் அளிக்க கால அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

English summary
Supreme court stays Tamilnadu high court order in the people welfare employees issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X