ஐ.சி.சி.யில் இந்திய பிரதிநிதியாக சீனிவாசனா? வரிந்து கட்டி எதிர்க்கும் நளினி சிதம்பரம்!!
உச்சநீதிமன்றத்தில் ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்தை தொடர்ந்துள்ள மனுதாரர் சார்பாக ஆஜராகி வாதாடி வருகிறார் நளினி சிதம்பரம். இந்த வழக்கில் நேற்று விசாரணையின் போது ஆஜராகி வாதாடிய நளினி சிதம்பரம், உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதியில்லாதவராக இருக்கும் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஆசைப்படுவது போல இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பில் இல்லாத சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கான இந்திய பிரதிநிதியாக செல்வது இருக்கிறது என்றார்.
இது தொடர்பாக பேட்டி ஒன்றில் நளினி சிதம்பரம் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்றத்தால் கிரிக்கெட் வாரிய கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவர் தற்போது கிரிக்கெட் வாரிய நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் இந்தியாவின் பிரதிநிதியாக அவர் எப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக முடியும்? இதுதான் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த வாதம்.
இந்த வாதத்தின் மீது வரும் 29-ந் தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. தற்போது உச்சநீதிமன்றம், முத்கல் கமிட்டியை விசாரணை நடத்த கோரியிருக்கிறது. எங்களுக்கு முத்கல் கமிட்டி மீது முழு நம்பிக்கை இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை உச்சநீதிமன்றம் தூய்மைப்படுத்திவிடும் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு நளினி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.