வழிப்பறியை எதிர்த்த ஆசிரியை கும்பலால் பலாத்காரம்: உ.பியில் மீண்டும் பயங்கரம்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் செயினைப் பறிக்க முயன்றதை எதிர்த்துப் போராடிய ஆசிரியை மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டம் நாக்லா மாது என்ற கிராமத்தில் ஆசிரியையாக பணி புரிந்து வரும் இளம்பெண் ஒருவர், வழக்கம் போல இன்றும் காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆள் அரவமற்ற சாலையில் ஆசிரியை தனிமையில் நடந்து வருவதைக் கண்ட 3 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று, ஆசிரியையை வழி மறித்துள்ளது. ஆசிரியையிடமிருந்து தங்கச் சங்கிலி மற்றும் ரூ. 5 ஆயிரம் ரூபாயைப் பறித்துள்ளது அக்கும்பல்.
இதனை எதிர்த்துப் போராடியுள்ளார் அந்த ஆசிரியை. இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் ஆசிரியையை பலமாகத் தாக்கியுள்ளது. பின்னர் சாலையோரம் இருந்த புதருக்குள் ஆசிரியையை இழுத்துச் சென்ற கும்பல், அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் ஆட்கள் நடமாட்டம் அதிகரிக்கவே ஆசிரியையை அங்கேயே விட்டு விட்டு குற்றவாளிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
அதற்குள்ளாக ஆசிரியையின் சத்தம் கேட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த சில வழிப்போக்கர்களால் ஒரு குற்றவாளியை மட்டுமே பிடிக்க முடிந்தது. மற்றவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பொதுமக்களால் பிடிக்கப்பட்ட ஒரு குற்றவாளியைக் கைது செய்தனர். மேலும், தப்பி சென்ற மற்ற குற்றவாளிகளை அவர்கள் தேடி வருகின்றனர்.
சமீபகாலமாக உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் ஒருபுறம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, மறுபுறம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் தினமும் தொடரத் தான் செய்கிறது.