வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி: பாஜகவுடனான தெலுங்குதேசம் கூட்டணி முறிகிறது?
ஹைதராபாத்: சீமாந்திராவில் பாரதிய ஜனதா - தெலுங்குதேசம் கட்சிகளிடையேயான கூட்டணி முறியக் கூடும் எனத் தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி 11 நாட்களுக்கு முன்பு இணைந்தது. சீமாந்திராவில் பாஜகவுக்கு 14 சட்டசபை தொகுதிகளும் 4 லோக்சபா தொகுதிகளும் தெலுங்குதேசம் கட்சியால் ஒதுக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியும் தனது வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால் பாரதிய ஜனதா அறிவித்திருக்கும் சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் பலரும் மிகவும் பலவீனமான வேட்பாளர்கள் என்றும் நிச்சயம் அவர்கள் தோற்றுப் போய்விடுவார்கள்..இதனால் தெலுங்குதேசம் கட்சியின் லோக்சபா தேர்தல் வேட்பாளர்களுக்கே பாதிப்பு என்பது தெலுங்குதேசம் தொண்டர்களின் கருத்து.
இதனால் பாரதிய ஜனதாவின் வேட்பாளர்கள் பலரையும் மாற்றக் கோரி சந்திரபாபு நாயுடுவின் வீட்டு முன்பாக தெலுங்குதேசம் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் நாயுடுவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேறுவழியில்லாமல் சந்திரபாபுவும் பாஜக தமது வேட்பாளர்களை வாபஸ் பெற வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பாஜக மேலிடத் தலைவர்களுடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாவிட்டால் 11 நாள் பாஜக- தெலுங்குதேசம் கூட்டணி முறிவடைந்துவிடும் என்றே கூறப்படுகிறது.