இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக சுதர்சன் சேனேவீரத்னே நியமனம்
டெல்லி: இந்தியாவுக்கான இலங்கை தூதராக சுதர்சன் சேனேவீரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். தூதராக இருந்த பிரசாத் கரியவாசம், அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கை தூதராக இருந்த பிரசாத் கரியாவசம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். தமிழக அரசியல் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக சுதர்சன் சேனேவீரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் பெரதேனியா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவராக பதவி வகித்து வந்த சேனேவீரத்னே, இலங்கையின் பாரம்பரியச் சின்னங்களைக் காக்கும் பணியை செய்து வந்தார்.
அத்துறையில் அவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, அமெரிக்க தொல்லியல் கழகத்தின் 2013-ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய மேலாண்மை விருதைப் பெற்றுள்ளார்.
தற்போது அயல்நாட்டுப் பணிக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தின் உயர் பதவி நியமனக் குழுவின் அனுமதி கிடைத்தால்தான், அவர் இந்தப் பதவியை ஏற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.