பெங்களூரில் பெரும் பரபரப்பு: மேலும் ஒரு பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம்
பெங்களூர்: மேற்கு பெங்களூரில் பள்ளி ஒன்றில் ஆயா வேலை செய்யும் பெண்ணின் 7 வயது மகளை 27 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 6 வயது மாணவி 2 பேரால் பள்ளியில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து பெங்களூரில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த அதிர்ச்சியில் இருந்தே பெங்களூர் மக்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆயா வேலை செய்யும் பெண் வீடுகளிலும் வேலை செய்து வருகிறார். அவர் லட்சுமி என்பவரின் வீட்டிலும் வேலை செய்து வருகிறார்.
பள்ளி வேலைக்கு செல்லும்போது அவர் தனது 7 வயது மகளை லட்சுமியின் வீட்டில் விட்டுவிட்டு செல்வார். கடந்த 27ம் தேதியும் அவர் தனது மகளை லட்சுமியின் வீட்டில் விட்டுள்ளார். வீட்டில் லட்சுமி இல்லாத நேரத்தில் அவரின் மகன் சீனிவாசன்(27) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி சிறுமியின் தாயார் தற்போது போலீசில் புகார் கொடுத்தார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.