‘நோட்டா’ ஓட்டு போடுவோம் பாலியல் தொழிலாளர்கள் எச்சரிக்கை
மும்பை: அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததால் வரும் லோக்சபா தேர்தலில் நோட்டாவைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொழிலில் அதிக பட்சம் 45 வயது வரையில் தான் ஈடுபட முடியும் என்பதால், ஓய்வூதியம் தரப்பட வேண்டும், பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து முன்னேற இலவசக் கல்விச் சலுகை தரப்பட வேண்டும், விபசாரத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பவை இந்த தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
50 லட்சம் பேர்
பாலியல் தொழிலாளர்கள் அமைப்பில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உறுப்பினர்களாக இருப்பதாகவும் 90 சார்பு அமைப்புகள் தங்களுக்கு இருப்பதாகவும் பாலியல் தொழிலாளர்களுக்கான அனைத்திந்திய அமைப்பின் தலைவர் பாரதி தேவ் கூறியுள்ளார்.
நோட்டாவுக்கு ஓட்டு
பாலியல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியும் மனிதாபிமானத்துடன் ஏற்று, தங்களுடைய தேர்தல் அறிக்கையில் சேர்க்காததால் லோக்சபா பொதுத் தேர்தலில் 'நோட்டா' (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) பொத்தானைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
பாலியல் தொழிலாளர்கள் இல்லாவிட்டால், உலகின் எந்தப் பகுதியிலும் பிற மகளிருக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் அதிகரித்துவிடும் என்று பாரதி தேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலட்சியப்படுத்த வேண்டாம்
இந்தத் தொழிலுக்கு யாரும் விரும்பி வருவதில்லை என்றும் வறுமை காரணமாகவோ, சமூகச் சூழல்களாலோதான் வர நேர்கிறது என்பதால் தங்களை அலட்சியப் படுத்தக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.