வட போச்சே...கேரளாவில் 'செட்டில்' ஆக திட்டமிட்டிருந்த ஷீலா தீட்சித்!
திருவனந்தபுரம்: கேரளா ஆளுநராக பதவி வகித்த ஷீலா தீட்சித் அம்மாநிலத்திலேயே வீடு கட்டி செட்டிலாகிவிடுவது என்ற முடிவில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளா ஆளுநராக சில மாதங்களுக்கு முன்புதான் ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டார். மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் ஷீலா தீட்சித் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி சார்பு ஆளுநர்கள் பதவி விலக வலியுறுத்தப்பட்டனர்.
ஆனால் தொடக்க முதலே ஷீலா தீட்சித் பிடிவாதமாக தாம் ராஜினாமா செய்ய முடியாது என்று கூறிவந்தார். அத்துடன் தம்மை ராஜினாமா செய்யுமாறு மத்திய அரசு கடிதம் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் அடம்பிடித்தார்.
நெருக்கடியில் ஷீலா
இருப்பினும் அடுத்தடுத்து ஆளுநர்கள் ராஜினாமா செய்வதும் டிஸ்மிஸ் செய்யப்படுவதும் அரங்கேறின. இதனால் வேறுவழியின்றி ஒரு முடிவுக்கு வர வேண்டிய நெருக்கடிக்கு ஷீலா தீட்சித் தள்ளப்பட்டார்.
ராஜ்நாத்துடன் சந்திப்பு
டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை திடீரென சந்தித்தார். அப்போது ஷீலா தீட்சித் ராஜினாமா செய்கிறார் என்று கூறப்பட்டது. ஆனாலும் அதை ஷீலா தீட்சித் மறுத்து வந்தார்.
திடீர் ராஜினாமா
மறுநாளே தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்.
காமன்வெல்த் போட்டிகள்
ஷீலா தீட்சித் இப்படி அடம்பிடிக்க சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று, அவர் மீதான காமன்வெல்த் ஊழல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆளுநர் பதவியில் பிடிவாதமாக நீடிக்கிறார் என்பதுதான்.
பிடித்துப் போன கேரளா
தற்போது மற்றொரு காரணமும் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் 4 மாத காலம்தான் ஆளுநராக ஷீலா தீட்சித் பதவி வகித்தாலும் இந்த மாநிலம் ரொம்பவுமே அவருக்குப் பிடித்துப் போய்விட்டதாம்.
வீடு கட்டி செட்டில் ஆக திட்டம்
கேரளா உணவுகள் அனைத்தையும் அவர் விரும்பி சாப்பிடுவதுடன் சமைக்கவும் கற்றுக் கொண்டாராம். மேலும் கேரளாவில் ஒரு அழகிய வீட்டைக் கட்டி பதவி காலம் முடிந்த பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிடுவது என்று கனவும் கண்டாராம்.
மகள் சொன்ன தகவல்
ஷீலா தீட்சித் இந்த கனவுகளைப் பற்றி வெளியே சொன்னது வேறு யாரும் அல்ல.. சாட்சாத் அவரது மகள் லத்திகா தீட்சித் சையத்தான். கேரளாவில் இருந்து நாளை விடைபெறும் ஷீலா தீட்சித்துக்கு திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட பிரிவுபசார விழாவில் அவரது மகள் லத்திகா, மாநில அமைச்சர் பாபுவிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்த தகவல்களை கூறினாராம்.
புத்தகம் எழுதப் போகிறார்..
மேலும் லத்திகாவிடம், கேரளா கனவு இல்லாமல் போய்விட்டது.. டெல்லி திரும்பி ஷீலா தீட்சித் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்று அமைச்சர் பாபு கேட்டதற்கு, விரைவில் புதிய புத்தகம் ஒன்றை எழுத திட்டமிட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
வட போச்சே என்பது இதுதானோ!