சண்டிகர்: செல்போனில் பேசியபடி டிராபிக் போலீஸ் மீது காரை மோதியவர் கைது
சண்டிகர்: செல்போனில் பேசியபடி டிராபிக் போலீஸ் மீது காரை மோதச் செய்து, அவரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி சண்டிகர் சாலையொன்றில் செல்போனில் பேசியபடி காரை ஓட்டிச் சென்ற அப்தாப் சிங் என்ற நபரை டிராபிக் போலீஸ் கண்டுள்ளார். உடனடியாக அவரைக் காரை நிறுத்தும்படி வழிமறித்துள்ளார். ஆனால், அப்தாப் சிங்கோ காரையும் நிறுத்தாமல், செல்போன் பேச்சையும் துண்டிக்காமல் டிராபிக் போலீஸ் மீது மோதியுள்ளார்.
இதில், காரின் முன்பக்கத்தில் சிக்கிக் கொண்டார் டிராபிக் போலீஸ். தொடர்ந்து அவர் காரை நிறுத்தும்படி கெஞ்சியுள்ளார். ஆனால், அப்போதும் அப்தாப் சிங் காரை நிறுத்தவில்லை. தொடர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் டிராபிக் போலீசை காரில் இழுத்துச் சென்றுள்ளார்.
தகவலறிந்து காரைத் துரத்திச் சென்ற போலீசார் அப்தாப் சிங்கைக் கைது செய்தனர். காரிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட டிராபிக் போலீஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இக்காட்சிகளை அருகில் வந்த மற்றொரு காரில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சண்டிகார் ஐ.ஜி. தனது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது அவர்கள் மது போதையில் இல்லை. இது தொடர்பாக நீதிமன்றம் விரைவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.