ராஜஸ்தானில் ராகுல் வாகனம் மீது கல்வீச்சு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது மர்ம நபர்கள் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் மத்திய அமைச்சரும் ராகுலின் நெருங்கிய சகாவுமான ஜிதேந்திர சிங் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ராகுல் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்காக ஆல்வார் வந்தடைந்த ராகுல் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் பொதுக்கூட்ட மேடைக்கு காரில் ஊர்வலமாக சென்றார். காரில் ஊர்வலமாக வந்த ராகுலுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராகுலின் வாகனத்தை சச்சின் பைலட் சிறிது நேரம் ஓட்டியும் வந்தார். இந்த ஊர்வலத்தின் முடிவில் திடீரென ராகுலின் பாதுகாப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
அத்துடன் ராகுல் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவதில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களிடையே அடிதடியும் அரங்கேறியது.