வடமாநிலங்களில் நீடிக்கும் புழுதிப் புயல்- 2 நாட்களில் 40 பேர் பலி!!
டெல்லி: டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் புழுதிப்புயல் மற்றும் மழையில் சிக்கி மொத்தம் 40 பேர் பலியானார்கள். புழுதிப்புயல் தாக்கும் அபாயம் தொடர்ந்தும் இருப்பதாக வெளியான அறிவிப்பால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
டெல்லியில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி வரை வெயில் கொளுத்தியது. ஆனால் சிறிது நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்யத்தொடங்கியது. இதனால் கடும் வெப்பத்தை அனுபவித்து வந்த டெல்லி மக்கள் இந்த குளிரினால் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் அவர்களது மகிழ்ச்சி சிறிது நேரமே நீடித்தது. மாலை 4.58 மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர புழுதிப்புயல் வீசியது. வேகமாக வீசிய காற்று சுழன்று சுழன்று அடித்ததில் பூமியில் உள்ள மண், புழுதி, சிறிய கற்கள் வேகமாக எழும்பி மக்களை தாக்க தொடங்கின.சாலைகளில் எங்கு பார்த்தாலும் புழுதி மண் பறந்தது. மக்களால் கண்களை திறந்து சாலைகளை பார்க்க முடியாத அளவுக்கு புழுதி நிறைந்து இருந்தது.
இதனால் உயிர் தப்புவதற்காக மக்கள் அலறி அடித்து பாதுகாப்பு இடங்களை தேடி ஓடினார்கள்.புழுதிப்புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப்பிடிக்காத மரங்கள் ஆங்காங்கே வேரோடு சாய்ந்தன. டெல்லி நகரில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
இந்த புழுதிப்புயலினால் டெல்லியில் 17 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மின் தடை காரணமாக மெட்ரோ ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் 9 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேசத்தில் 14 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் தலைநகர் லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த புயல்-மழையால் தலைநகர் லக்னோ, கான்பூர், முசாபர்நகர், பரேலி உள்ளிட்ட பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டது. இந்த புயல் மற்றும் மழையில் சிக்கி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், ஈத் மாவட்டத்தில் 5 பேரும், பரபாங்கி பகுதியில் 3 பேரும் என மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் அந்த பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். லக்னோவை அடுத்த ஈத் மாவட்டம் சாராமு கிராமத்தில் நேற்று இரவு டிராக்டரில் சென்றவர்கள் மீது மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். இசுலு கிராமத்தில் மரம் விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பலியானார்கள்.
ஜார்கண்டில் 7 பேர் சாவு
ஜார்கண்ட் மாநிலத்தில் தான்பாத், சத்ரா ஆகிய பகுதிகளை நேற்று காலை 4.30 மணி அளவில் புழுதிப்புயல் தாக்கியது. இந்த மழை ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், லடேகர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக இருந்தது.மழையின்போது அந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.அதிகாலையில் சூறாவளியுடன் பெய்த மழையில் சத்ரா மாவட்டம் கோனா கிராமத்தில் மரம் முறிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தை மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் ஆகிய 4 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.
இரண்டாவது சம்பவமாக தான்பாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். கடந்த 2 நாட்களில் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட்டில் புயல் -மழைக்கு மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளனர்.